தாய்மைக்கு அழகு தேவையில்லை... ஆசிட் வீச்சில் பாதித்த லட்சுமிக்கு பிறந்த தேவதை
டெல்லி: ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போனாலும் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்து அதை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் லட்சுமி. அழகான ரோஜா போல மலர்ந்து சிரிக்கும் அந்த குழந்தைக்கு 'பிஹூ' என்று பெயரிட்டுள்ளார்.
என் முகத்தைப் பார்த்து என் மகள் பயந்து அழுவாள் என்று நான் அஞ்சினேன்... ஆனால் என்மகள் என்னைப் பார்த்து அழகாய் சிரிக்கிறாள் என்று மகிழ்ச்சி பொங்க தாய்மை பூரிப்போடு கூறுகிறால் லட்சுமி.
டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு தனது 16-வது வயதில் 32 வயது நபர் ஒருவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளானார் லட்சுமி அகர்வால் . தனது காதலை ஏற்க மறுத்ததால் அந்த நபர் லட்சுமி மீது ஆசிட் வீசினார். இதில் முகத்தில் கடும் பாதிப்புக்கு ஆளான லட்சுமி, அன்று முதல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மாறினார்.
உலகின் தைரியமான பெண்
ஆசிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ‘சானவ் பவுன்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு நடத்தி வரும் லட்சுமி, கடந்த 2014-ல் அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமாவிடம் இருந்து ‘உலகின் தைரியமான பெண்' விருதை பெற்றார். ‘இண்டியன் ஆப் தி இயர்' என்று என்டிடிவி-யால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிட் வீச்சுக்கு எதிரான குரல்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை இவர் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். இதையடுத்து ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மண வாழ்க்கை
‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்' பிரச்சாரத்தில் தன்னுடன் இணைந்து செயல்படும் அலோக்-ஐ தனது வாழ்க்கை துணைவராக இணைத்துக் கொண்டார் லட்சுமி. இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது திருமணத்துக்கு வருவோர் எனது முகம் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை தவிர்த்தோம் என்கிறார் லட்சுமி.
திருமணம் அவசியமில்லை
சமூகத்தில் இரண்டு பேர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் என்ற சான்றிதழ் தேவையில்லை என்கிறார் அலோக் தீட்சித். புரட்சிகரமான இந்த ஜோடி தங்கள் குழந்தையை 7 மாதங்களுக்குப் பிறகு உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அழகான பிஹூ
லட்சுமி என்ற ஒற்றை பெயரிலேயே அறியப்படும் இவர் தனது மகளுக்கும் குடும்பப் பெயரை இணைக்காமல் ஒன்றை வார்த்தையில் ‘பிஹு' என பெயரிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் பிறந்த பிஹுவை இதுவரை வெளியுலகுக்கு அறிமுகம் செய்யவில்லை.
உலகிற்கு அறிமுகம்
இம்முடிவு லட்சுமியும் அவருடன் இணைந்து வாழும் அலோக் தீட்சித்தும்,28 சேர்ந்து எடுத்த முடிவாகும். கடந்த 6-7 மாதங்களாக குழந்தைக்கும் எங்களுக்கும் நேரம் தேவைப்பட்டது. மேலும் தொடர்ந்து வேலைப்பளுவும் இருந்ததாம்.
மகளுக்கு என்னை பிடித்திருக்கிறது
நான் ரோட்டுல நடந்து போறப்ப எல்லோரும் என்னை வித்தியாசமா பாப்பாங்க. சிலர் என்னை ரொம்ப பரிதாபமாக பாப்பார்கள். சிலர் பயப்படுவாங்க. இதேபோல் என்னோட குழந்தையும் என்ன பார்த்து பயப்படுமோன்னு நினைத்திருந்தேன். ஆனா அவ, என்னை பார்த்து ரொம்ப அழகா சிரிப்பா. யாரும் என்ன பார்த்து அப்படி சிரிச்சதில்ல என்கிறார் லட்சுமி.
மகள் ஏற்றுக்கொண்டாள்
குழந்தை என்னை ஏற்றுக் கொள்வாளா என பார்த்துவிட்டு, குழந்தை பிறந்ததை பற்றி எல்லாருக்கும் தெரிவிக்கலாம் என்றிருந்தேன். குழந்தைக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு; அதான் இப்ப எல்லோருக்கும் சொன்னேன்" என்கிறார் லட்சுமி. மகள் பிறந்த சந்தோசம் ஒருபுறம் இருக்க, லட்சுமி சமீபத்தில் தனது தந்தை மற்றும் தம்பியை இழந்தார். எனவே சுற்றத்தினர் அவரை கேள்விகளால் துளைப்பதை நானும் விரும்பவில்லை" என்று பிஹுவை அறிமுகம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களை கூறுகிறார் அவரது கணவர் அலோக் தீட்சித்.