ஆசிட் வீசினால் இனி தூக்கு... சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு!!
டெல்லி: ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டம் திருப்பட உள்ளது.
சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் பட்டப்பகலில் பெண் மருத்துவர் மீது மர்மநபர்கள் இருவர் ஆசிட் வீசினர்.
இது பெண் மருத்துவரின் முகம் முழுவதும் வெந்துவிட்டது. தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடுமுழுவதும் பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
கடந்த 2010 முதல் 2012-ம் வருடம் வரை டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதுள்ள சட்டப்படி, ஆசிட் வீச்சு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகளோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.
ஆனால் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுகின்றனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங் கையில் எடுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகளை, 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்த விதிமுறைகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சட்டத்திருத்தம்
ஆசிட் வீச்சு குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மை அடிப்படையில் அதிகபட்சமாக, தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும்.
வழக்கின் விசாரணை, மேல் முறையீடு உள்ளிட்டவற்றுக்கு காலம் வரையறுக்கப்படும். ஆசிட் விற்பனை முறைப்படுத்தப்படும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படும்.
முறையான அடையாள அட்டை மற்றும் உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே, ஆசிட் பெற முடியும். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிப்பது, காப்பீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களும் அரசின் சட்ட திருத்தத்தில் இடம் பெறும்.