16 ஆண்டுகளுக்குப் பின் தேனை ருசித்த இரோம்... கண்ணீர் விட்டு அழுத "இரும்புப் பெண்"!
இம்பால்: ஆய்தப்படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த, இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். 16 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக தேன் சாப்பிட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண் என அழைக்கப்படுபவர் இரோம் ஷர்மிளா (44). சமூக ஆர்வலரான இவர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2000ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால், ஷர்மிளா தற்கொலைக்கு முயற்சிப்பதாக வழக்குப்பதிவு செய்த போலீஸ், அவரைக் கைது செய்து மருத்துவமனையிலேயே சிறை வைத்தது. ஆனால், தொடர்ந்து 16 ஆண்டுகளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வந்தார். இதனால் மூக்கு வழியாக அவருக்கு உணவு செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டார். முன்னதாக, இம்பால் கோர்ட்டில் ஆஜரான அவரை, ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின், மருத்துவமனைக்கு சென்று சட்டப்படி அவர் விடுதலையானார்.
சிறிதளவு தேனை நாக்கில் தடவி, தனது உண்ணாவிரதத்தை அவர் முடிப்பதாக அறிவித்தார். 16 ஆண்டுகளுக்குப் பின் தேனை ருசித்த ஷர்மிளா, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
ஷர்மிளாவின் இந்த 16 ஆண்டுகள் போராட்டம் தான் உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டமாக கருதப்படுகிறது.