குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்தது!
மும்பை: வெளிநாட்டு நிதி உதவி பெற்று மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குஜராத் அரசு புகார் அளித்தது.
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் செதல்வாட்டின் என்.ஜி.ஓ. தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே டீஸ்டா செதல்வாட் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து டீஸ்டா செதல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆகியோர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரது முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடியானது.
இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் இருவரும் முன் ஜாமீன் கோரி மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது, டீஸ்டா செதல்வாட்டால் தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தானது என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம் டீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவேத் அனந்த் ஆகியோருக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.