ஐபிஎல்லில் பெட்டிங்.... நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீஸ் சம்மன்!
கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் நடந்தது தொடர்பாக நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீசார் சம்மன்
மும்பை: கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்கு வரும்படி பிரபல நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் சீசன் 11 சமீபத்தில் முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், மும்பை போலீசார் நடத்திய சோதனைகளில், கடந்த ஆண்டு நடந்த 10வது சீசனின்போது பெட்டிங் சூதாட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பெட்டிங் கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெட்டிங்கில் ரூ.100 கோடிக்கு மேல் புழங்கியது தெரியவந்தது.
மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த பெட்டிங்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து விசாரணைக்கு வரும்படி, நடிகர் அர்பாஸ் கானுக்கு, மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் தயாரித்துள்ள அவர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.