பிரபல நடிகை கடத்தல் வழக்கு.. திலீப்பை ஹைகோர்ட்டும் கைவிட்டது
பிரபல நடிகையை கடத்திய வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
திருவனந்தபுரம்: பிரபல நடிகையை கடத்திய வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பிரபல திரைப்பட நடிகை கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
விசாரணையின் அடிப்படையில் அவர் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கையோடு ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். அதேநேரத்தில் ஆலுவா போலீஸார் திலீப்பை காவலில் எடுத்து அனுமதி கோரினர். இதையடுத்து ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
இதையடுத்து அங்கமாலி நீதிமன்றத்தில் மீண்டும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அவரை வரும் 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அவரது போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். எனினும் அவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.