கலாபவன் மணி மர்ம சாவு.. சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை! குடும்பத்தார் வரவேற்பு
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி மர்ம சாவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளது கேரள மாநில அரசு. இதுதொடர்பாக சிபிஐக்கு இன்று அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த நடவடிக்கையை மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். உண்மை வெளியே வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
45 வயதான கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது தடயவியல் ஆய்வில் அவரது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இருந்தது தெரியவந்தது. எனவே சாவில் சதி இருப்பதாக மணி குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.
கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அரசு அமைந்த நிலையில் கலாபவன் மணி குடும்பத்தினர் அண்மையில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தனர். அப்போது கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் திருப்தி இல்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பினராயி விஜயனிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று இன்று கேரளா அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளா காவல்துறை தலைவர் லோக்நாத் பெகெரா சிபிஐக்கு பரிந்துரைத்து இன்று கடிதம் அனுப்பினார்.
இந்த நடவடிக்கையை மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். உண்மை வெளியே வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.