நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள்.. தூக்கிலிடுங்கள்... இந்து மகாசபை பண்டிட் அசோக் வெறிப் பேச்சு
நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும் என இந்து மகாசபை துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா வெறித்தனமாக பேசியுள்ளார்.
Recommended Video
மீரட்: இந்து தீவிரவாதம் என விமர்சித்ததற்காக நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள் என அகில பாரதீய இந்து மகாசபை அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா வெறித்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து வார இதழில் கமல்ஹாசன் எழுதியது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது. கமல்ஹாசனை பாஜக தலைவர்கள் மிகக் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
தீவிரவாதிகளின் ஆதரவாளர்
உத்தரப்பிரதேசத்தில் வாரணாயில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜாவோ, தீவிரவாதிகளின் ஆதரவாளர் கமல்ஹாசன் என சாடியுள்ளார்.
தூக்கிலிடுங்கள்
இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செய்தியாளர்களிடம் இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்றவர்களை சுட்டுப் படுகொலை செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போடவேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும்.
மரணம்தான் தண்டனை
இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை அவதூறாக பேசுகிற யாருக்கும் இந்த புனித பூமியில் வாழுகிற உரிமையே கிடையாது. அவர்களது விமர்சனங்களுக்கு பிரதிபலன் மரணம் மட்டும்தான். இவ்வாறு பண்டிட் அசோக் ஷர்மா கூறினார்.
மன்னிப்பே கிடையாது
இந்து மகாசபையின் மீரட் பிரிவு தலைவர் அபிஷேக் அகர்வால் கூறுகையில், கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்களை இந்து மகாசபையினர் புறக்கணிக்க வேண்டும். இந்துக்களையும் இந்து மதத்தையும் அவமதிக்கும் யாருக்கும் மன்னிப்பே கிடையாது என்றார்.