தெலுங்கானாவில் உள்ள கிராமம் ஒன்றை தத்தெடுத்த 'செல்லம்' பிரகாஷ்ராஜ்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை அடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவில் உள்ள கிராமம் ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மையில் பிரகாஷ் ராஜ் பவுன்டேஷன் எனும் அறக்கட்டளையை துவங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டாரெட்டிபள்ளி கிராமத்தை தத்தெடுக்க விரும்புவதாக மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே. தாரகராமா ராவிடம் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்த முடிவை அமைச்சர் ராவ் பாராட்டியுள்ளார். மஹபூப்நகர் மாவட்டம் மிகவும் பின்தங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம்
கொண்டாரெட்டிபள்ளி கிராமத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அரசு
பிரகாஷ் ராஜ் அரசுடன் சேர்ந்து விவசாயிகளுக்கு உதவி செய்ய உள்ளார். அந்த கிராமத்தில் அவர் அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க உள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜின் பவுன்டேஷன் ஆட்கள் கொண்டாரெட்டிபள்ளி கிராமத்தில் சர்வே எடுத்து வருகிறார்கள். அந்த பணி முடிந்த பிறகு அவர் தன்னுடைய திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
மகேஷ்பாபு
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.