கர்நாடகா தேர்தல் களத்தில் ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் இணைந்து பாஜகவுக்கு எதிராக பிரசாரம்!
கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக குஜராத் தலித் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மே 12-ந் தேதி நடைபெறுகிறது. மே 18-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் படுதீவிரமான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் இருக்கலாம் என்பதால் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதில் அக்கட்சி மும்முரமாக இருக்கிறது. இதனிடையே குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பாஜகவுக்கு எதிராக தொடர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பிரசார கூட்டங்களில் பேசும் ஜிக்னேஷ் மேவானி, தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் மோடியிடம் நீங்கள் கேள்வி கேளுங்கள்..2014 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே என கேள்வி எழுப்புங்கள்..
ரூ15 லட்சம் வங்கி கணக்குகளில் போடப்படும்; 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; வெளிநாட்டு கருப்பு பணம் மீட்கப்படும் என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் எங்கே என முகத்தில் அறைந்தது போல கேள்வி கேளுங்கள் என்றார்.
இதில் பேசிய பிரகாஷ்ராஜ், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாதது போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புகிறார்கள். பசு பாதுகாப்பு, கலாசார பாதுகாப்பு இவற்றின் பெயரால் மக்களை மத, ஜாதி ரீதியாக பிரித்து வாக்குகளை ஒருமுகப்படுத்தும் போக்கை பாஜக கையாளுகிறது என சாடினார்.