சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது ஏன்? மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை ஹைகோர்ட் கேள்வி
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது குறித்து மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1.5 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், எஞ்சிய 3.5 ஆண்டு சிறை வாசத்துக்காக புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே அவரை விடுதலை செய்தது மகாராஷ்டிரா அரசு.
இந்நிலையில் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது குறித்து மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.