நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி, ககன்தீப்சிங் பேடிக்கு என்.டி.டிவி விருது
மும்பை: சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்களாக செயல்பட்ட அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களையும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' ஆக தேர்ந்தெடுத்து விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது. இதே காரணத்துக்காக, நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி மற்றும் ககன்தீப் சிங் பேடி ஆகிய மூவருக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி கவுரவித்தது என்.டி.டிவி
என்.டி.டிவி நிறுவனம் ஆண்டுதோறும் சாதனை படைத்தவர்களுக்கு இந்தியன் ஆஃப் த இயர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் மழை - வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் நடிகர் சித்தார்த், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி, ககன்தீப்சிங் பேடி, மற்றும் மூன்று சிறுவர்களுக்கும் இந்த ஆண்டு இந்த கவுரவும் அளிக்கப்பட்டது.
விருதினை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூவரும்"நாங்கள் நன்றாக படித்து இன்னும் நாட்டுக்கு சேவையாற்றுவோம்" என்று தெரிவித்தனர்.
வத்தலகுண்டுவிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் சேப்பாக்கம் ரயில் பாலத்துக்கு கீழே கூவம் கால்வாயை ஒட்டி குடிசை போட்டு வசித்தனர். மழை வெள்ளத்தில் அத்தனையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்காலிக வசிப்பிடத்தில் இருந்த போதும் அந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் உற்சாகமாக தன்னார்வலர்களாக பணியாற்றினர் இந்த சிறுவர்கள்.
2015ம் ஆண்டின் என்.டி.டிவி விருது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது தீபிகா படுகோனேவிற்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் வழங்கப்பட்டது.