மாணவிகளிடம் அசிங்கமாக நடந்த கும்கி நடிகர் விவகாரம் .. விசாரணை அதிகாரி சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்த நடிகர் ஸ்ரீஜித் ரவியின் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி ராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீஜித். கும்கி படத்தில் நடித்த அவர் பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலத்தில் பள்ளி மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததுடன் தனது காருக்குள் இருந்தபடியே தனது ஆணுறுப்பை காட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த ஒத்தப்பாலம் போலீஸ் அதிகாரி ராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அவர் வழக்கு விசாரணையை முறையாக நடத்தாமல் மூடி மறைக்கப் பார்த்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஒத்தப்பாலம் துணை கலெக்டர் பிபி நூஹ் அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஆகஸ்ட் 31ம் தேதி இது குறித்து விசாரணையை துவங்குமாறு எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி ராஜசேகரன் குற்றவாளியை காப்பாற்ற மாணவிகளின் பெற்றோரை புகார் அளிக்கவிடாமல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் பெற்றோரை புகார் கொடுக்கவிடாமல் செய்துள்ளார் ராஜசேகரன். அதன் பிறகு மாணவிகள் படிக்கும் பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவி பாலக்காடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.