மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் நடிகை கவுதமி திடீரென சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் கவுதமிக்கு பாஜக தலைவர்களுடன் அரசியல் தொடர்புகள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மோடியை டெல்லிக்கு சென்று சந்தித்தார் கவுதமி. இதன்பிறகு திடீரென கமல்-கவுதமி பிரிந்தனர். கவுதாமி தற்போது தனியாக வசித்து வருகிறார்.
ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வெளிப்படையாக குரல் எழுப்பிய பிரபலம் கவுதமி மட்டுமே. இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கவுதமியை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக தனது வேட்பாளராக அறிவிக்கும் என்ற வதந்திகள் கொடிகட்டி பறந்தன. ஆனால், ஆர்.கே.நகரில் கங்கை அமரன் களமிறக்கப்பட்டார். தினகரன் தரப்புமீதான பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை இன்று டெல்லியில் கவுதமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அமைச்சரை கவுதமி சந்தித்ததாக அவர் தரப்பில் சிலர் தெரிவிக்கிறார்கள். கமல் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கவுதமியின் டெல்லி பயணம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.