ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி: நடிகை மரியா சூசைராஜ் கைது
அகமதாபாத்: ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த வழக்கில் கன்னட நடிகை மரியா சூசைராஜை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாடலாக இருந்து கன்னட திரை உலகில் நுழைந்தவர் நடிகை மரியா சூசைராஜ். அவர் மும்பையைச் சேர்ந்த பரோமிதா சக்ரவர்த்தி என்பவருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் வதோதராவில் டிக்கெட் புக்கிங் ஏஜென்சி ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார். அவரது ஏஜென்சி மூலம் பல ஹஜ் யாத்ரீகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
மரியாவோ யாத்ரீகர்களுக்கு தெரியாமல் அவர்களின் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.2.68 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். பணத்தை அளித்து ஏமாந்தவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வதோதரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மரியா முன்ஜாமீன் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை மைசூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
மரியாவுடன் சேர்ந்து மோசடி செய்த பரோமிதா தலைமறைவாகியுள்ளார்.
முன்னதாக மும்பையைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரான நீரஜ் குரோவர் கொலை வழக்கில் கடந்த 2008ம் ஆண்டு மரியா கைது செய்யப்பட்டார். குரோவர் மரியாவின் மும்பை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆதாரங்களை அழித்ததற்காக மரியாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அனுபவித்த பிறகு அவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.