திருப்பதி கோவிலில் புதையலை திருடப் போகிறீர்களா.. நடிகை ரோஜா ஆவேசம்!
திருப்பதியில் 9 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகையும் ஆந்திர எம்எல்ஏவுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: திருப்பதியில் 9 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகையும் ஆந்திர எம்எல்ஏவுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 12 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருப்பதியில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ரோஜா எதிர்ப்பு
பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று பாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நடிகையும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரோஜா சந்தேகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரோஜா நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு மற்றும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லவும், யாரும் நடந்து செல்லவும் தடை என்ற அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்புவதாக கூறினார்.
புதையலை எடுக்க திட்டமா?
தேவஸ்தானம் மீது முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறிய ஊழல் புகார் உண்மையா என்ற கேள்வி தற்போது எழுவதாக கூறிய அவர், 9 நாட்கள் கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்காமல் சுரங்கத்தை தோண்டி நகை, பணத்தை எடுக்க நினைக்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பல்வேறு சந்தேகம்
அல்லது, ஏற்கனவே செய்த தவறுகளை இந்த 9 நாட்களுக்குள் சரிக்கட்ட தேவஸ்தானம் முயற்சிக்கிறதா என்றும் ரோஜா கேள்வி எழுப்பினார். திருப்பதியில் 9 நாட்கள் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்ற முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரோஜா எச்சரிக்கை
கும்பாபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களை அனுமதிக்காவிட்டால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று நடிகை ரோஜா எச்சரித்தார். இதனிடையே திருப்பதியில் புதையலை தோண்டி எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.