பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய விவகாரம்.. நடிகை ரம்யா மீது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முட்டை வீச்சு
பெங்களூரு: நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், 'பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
நடிகை ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித் துள்ள கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மங்களூர் அருகே ரம்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். முட்டை வீசியதாக போலீசார் தன்னிடம் தெரிவித்ததாகவும் எனது கார் கன்வாயில் வந்த எந்த கார் மீது வீசப்பட்டது என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என்று ரம்யா செய்தியாளர்களிடம் கூறினார்.