தேர்தல் தோல்வி எதிரொலி... மண்டியா வீட்டை காலி செய்தார் ரம்யா: மீண்டும் நடிக்கிறார்?
மாண்டியா: தேர்தல் தோல்வி எதிரொலியாக மாண்டியா வீட்டைக் காலி செய்துள்ளார் நடிகை ரம்யா. இதற்கிடையே நடிகர் அம்பரீஷ் செய்த பிரச்சாரமே ரம்யாவின் தோல்விக்குக் காரணம் என ஓட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா. இவர் மாண்டியா லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வந்தார்.
நாட்டிலேயே மிகவும் இளவயது எம்.பி என்ற பெருமை பெற்றிருந்த ரம்யாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப் பட்டது. தீவிர பிரச்சாரம் மேற்கொண்டும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் புட்டராஜுவிடம் தோல்வியை தழுவினார் ரம்யா.
இந்நிலையில் தற்போது மாண்டியா பகுதி வித்யாநகரில் குடியிருந்த வாடகை வீட்டை ரம்யா காலி செய்துள்ளார்.
மனவருத்தம்...
கட்சியில் ஒரு தரப்பினர் ரம்யாவுக்கு எதிராக செயல்பட்டதே அவரது தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப் பட்டது. மேலும், தோல்வியடைந்த தன்னை கட்சியினர் யாரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்ற கோபமும் ரம்யாவுக்கு உள்ளதாம். இதனால் தான் ரம்யா வீட்டைக் காலி செய்ததாக கூறப்பட்டது.
புது வீடு....
ஆனால், ரம்யாவின் உதவியாளர் இது தொடர்பாக கூறும் போது, ‘ரம்யா விரைவில் மாண்டியாவில் புது வீடு கட்டி குடியேற இருக்கிறார். அதனால் தான் தற்போதைய வீட்டைக் காலி செய்திருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
வாஸ்து பிரச்சினை...
மேலும், தற்போது குடியிருக்கும் வீட்டின் வாஸ்து சரியில்லை என்பதாலும் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு பெங்களூர் சென்றுள்ளார் ரம்யா என அவர் கூறியுள்ளார். ஆனபோதும், அங்கிருந்தபடியே மாண்டியா மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவாராம் ரம்யா.
சர்ச்சை....
இதற்கிடையே, நடிகை ரம்யாவின் தோல்விக்கு அமைச்சர் அம்பரீசே காரணம் என்ற வாசகத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டு மற்றும் பேனர் மத்தூர் டி.பி.சர்க்கிளில் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், அம்பரீஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விரைந்து வந்து, சர்ச்சைக்குரிய அந்த பிளக்ஸ் போர்டு மற்றும் பேனரை அகற்றினார்கள்.
விளக்கம்...
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'ரம்யா தோல்விக்கு அம்பரீஷ் காரணம் இல்லை. அம்பரீசின் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சொந்த தொகுதியில் தான் பின்னடைவு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய பேனரை வைத்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்' என்றனர்.
மீண்டும் நடிப்பு..?
முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியலில் தான் தோல்வியடைந்தால் பின்னர் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விடுவேன் என குறிப்பிட்டிருந்தார் ரம்யா.
கதைகளுடன் காத்திருக்கும் இயக்குநர்கள்...
இதனால், மீண்டும் அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, தகுந்த கதைகளுடன் ரம்யாவைச் சந்திக்க இயக்குநர்கள் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நேரில் நன்றி...
வீட்டைக் காலி செய்தாலும் விரைவில் மாண்டியா மக்களை சந்தித்து தனக்கு வாக்களித்ததற்காக நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளாராம் ரம்யா.