தாம்பாளத் தட்டில் வஸ்திரம் வைத்து, தொண்டர்களுடன் ஊர்வலம்... கோவில் விழாவுக்கு வந்த ரோஜா!
புத்தூர், ஆந்திரா: ஆந்திர மாநிலம் புத்தூரில் நடந்த தர்மராஜா கோவில் விழாவுக்கு நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரோஜா, தடபுடலாக வந்து கலந்து கொண்டார். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் கோவிலில் நின்றபடி முழங்கினார்.
புத்தூரில் திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று ரத உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு நகரி தொகுதி எம்.எல். ஏ.வும் நடிகையுமான ரோஜா, பட்டு வஸ்திரம் வழங்கினார். முன்னதாக வஸ்திரத்தை தாம்பாளத் தட்டில் வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ரோஜா செய்தியளர்களிடம் பேசுகையில், உங்கள் வீட்டு பெண் போல நான் செயல்படுவேன். ரோஜா ஒரு நடிகை. அவர் எம்.எல்.ஏ. ஆனால் தொகுதி பக்கமே வர மாட்டார். நடிக்க போய் விடுவார் என கூறினார்கள். ஆனால் அத்தனையும் பொய் பிரசாரம் என்பதை தற்போது நீங்களே கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
மக்களுக்கு, தொண்டர்களுக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன். சந்திரபாபு நாயுடு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சியை பிடித்து உள்ளார். விவசாயிகள், மகளிர் குழுக்களின் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார். அதனால் இப்போது கடன் தள்ளுபடி செய்யாமல் ஏதேதோ கூறி வருகிறார்.
அவர் கூறியபடி கடனை தள்ளுபடி செய்யும் வரை விடமாட்டோம். 1 மாதம் பொறுத்திருப்போம் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியதால் தற்போது அமைதியாக இருக்கிறோம். விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். எங்கள் போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு கட்சியினரையும் திரட்டுவோம் என்றார் ரோஜா.