ஆதர்ஷ் முறைகேடு வழக்கில் அசோக் சவானை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மறுப்பு!
மும்பை: மும்பை ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில், முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்கக் கோரிய சிபிஐ மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கார்கில் போர் வீரர்களுக்காக மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் இந்த வீடுகள் முறைகேடாக பல்வேறு பிரமுகர்களுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கடந்த 2011 ஜனவரி மாதம் மகாராஷ்டிரா அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் 25 பேருக்கு சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கியது தெரிய வந்தது.
இந்த ஊழலில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி மும்பை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்திய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் டி.கே.கவுல், ஏ.ஆர்.குமார், பிரிகேடியர் எம்.எம்.வான்சூ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கில் இருந்து அசோக்சவான் பெயரை நீக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அசோக்சவானை ஆதர்ஷ் ஊழலில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி சி.பி.ஐ. கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அசோக்சவானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.