ஒரு கசப்பான செய்தி... இதயத்திற்கு உப்பை விட மோசமான எதிரியாம் சர்க்கரை!
டெல்லி: இதய நோய், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்குவதில் உப்பை விட சர்க்கரை மோசமானது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வயது கூடக் கூட சாப்பாட்டில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். அதிலும், ரத்தக் கொதிப்பு மற்றும் இதயநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உப்பைக் கண்ணில் கூட காட்டாதீர்கள் என கூறுவார்கள்.
ஆனால், ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளை உருவாக்குவதில் உப்பை விட மோசமானது சர்க்கரை என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்...
அதிலும் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானத்தில் சேர்க்கப் படும் சர்க்கரைப் பொருட்கள் உப்பை விட தீங்கானவை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எச்சரிக்கை...
இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் அதிகப்படியான சர்க்கரையால் இரத்தக் கொதிப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கட்டுக்குள் வைக்க வேண்டும்...
2025ம் ஆண்டு வாக்கில் சுமார் 25 சதவீத மரணங்கள் அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை ஏற்படலாம் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், இப்போதிருந்தே சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
குறைவான சர்க்கரை... தித்திப்பான வாழ்க்கை
எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான உப்பு மற்றும் சர்க்கரை அளவை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.