இஸ்ரோ, ஹெச்.ஏ.எல். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: இது மோடி ஸ்டைல்
பெங்களுர்: இஸ்ரோ, ஹெச்.ஏ.எல். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி வரும் மோடி அரசு வெள்ளிக்கிழமை மற்றும் ஒரு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மாத்தூருக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக(டிஆர்டிஓ) தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அவர் டிஆர்டிஓ தலைவர் பொறுப்பை மூன்று மாதங்களுக்கு வகிப்பார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் அவினாஷ் சந்தர் அந்த பதவியில் இருந்து இன்று விலகுகிறார். இளம் தலைவருக்கு வழிவிடுகிறார் சந்தர்.
டிஆர்டிஓ தலைவர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக இருக்க மாட்டார் என்று தெரிகிறது. டாக்டர் சந்தர் வெளியேறிய பிறகு டிஆர்டிஓவின் மூத்த அதிகாரி டாக்டர் கே. தமிழ்மணிக்கு அந்த பதவி வழங்கப்படும் என்று ஊடகங்கள் முன்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சந்தர் அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு தேவையான பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அக்னி ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுவர்ண ராஜுவுக்கும் கூடுதல் பொறுப்பு
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) நிறுவனத்திற்கும் இன்று மாலை புதிய தலைவர் கிடைக்கிறார். வடிவமைப்பு பிரிவு தலைவராக உள்ள டி. சுவர்ண ராஜுவுக்கு ஹெச்.ஏ.எல். தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்படுகிறது. அவர் இந்த புதிய பொறுப்பில் 3 மாதங்கள் இருப்பார்.
பப்ளிக் என்டர்பிரைசஸ் செலக்ஷன் போர்டு(பிஇஎஸ்பி) ஹெச்.ஏ.எல்.-இன் அடுத்த தலைவராக ராஜுவின் பெயரை தேர்வு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஆர்.கே. தியாகி இன்று ஹெச்.ஏ.எல். தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இஸ்ரோ
இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக டாக்டர் சைலேஷ் நாயக்கை நியமித்து அரசு கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது.
சைலேஷ் ஏற்கனவே வகித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் பொறுப்புடன் சேர்த்து இஸ்ரோ தலைவர் பதவியையும் வகிப்பார். அவர் இஸ்ரோ தலைவராக ஒரு மாதம் தான் இருப்பார். அவரை நியமித்த 10 நாட்கள் கழித்து மத்திய அரசு ஏ.எஸ். கிரண் குமாரை இஸ்ரோவின் புதிய தலைவராக நியமித்துள்ளது. குமார் 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராக இருப்பார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர்
இந்த கூடுதல் பொறுப்பு அளிக்கும் பாணி பாதுகாப்புத் துறையில் துவங்கியது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறையையும் அளித்து மோடி அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. 6 மாதங்கள் கழித்து நவம்பரில் மனோகர் பாரிக்கர் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்பட்டார்.