கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து ரயில் மறியல்... மாண்டியாவில் கூடுதல் போலீசார் குவிப்பு
பெங்களூரு: மாண்டியா ரயில் நிலையத்தில் கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து ரயில் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கன்னட சலுவாலியா கட்சி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ரயில் மறியல் போராட்டம் கர்நாடகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சற்று முன் மாண்டியா ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது முடிந்த சற்று நேரத்திற்கெல்லாம் கர்நாடக ரக்ஷன வேதிகா என்ற மற்றொரு கன்னட அமைப்பினர் மாண்டியா ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.