கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு: அக். 15ல் குற்றச்சாட்டுப் பதிவு குறித்த தீர்ப்பு- கோர்ட்
டெல்லி: 2002ம் ஆண்டு கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்த தீர்ப்பை அக்டோபர் 15ம் தேதி பிறப்பிப்பதாக டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஷியாமல் கோஷ் மற்றும் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கோஷ் முன்ஜாமீன் கோரியுள்ளார். இதன் மீதும் நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தார். இருப்பினும் உத்தரவு இன்னும் தயாராகவில்லை என்று கூறி அக்டோபர் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
முன்னதாக இன்று நடந்த சில நிமிட நேர விசாரணையின்போது குற்றம்ம சாட்டப்பட்ட சிலர் எழுத்துப்பூர்வமாக தங்களது வாதத்தைப் பதிவு செய்தனர். அதை பதிவு செய்து கொள்வதாக நீதிபதி ஷைனி அறிவித்தார்.
கோஷ் தவிர ஹட்சின்சன் மேக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஸ்டெர்லிங் செல்லுலார், பார்தி செல்லுலார் லிமிட்டெட் ஆகியவையும் இந்த வழக்கி் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு கூடுதல் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 846.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றண் சாட்டியுள்ளது.
கோஷ் 2000 பிப்ரவரி 7 முதல் 2002 மே 31 வரை தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவர். இவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
முன்னதாக 2011 இல் சிபிஐ தொடர்ந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் அ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா உள்பட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இரு தரப்பின் வாதங்களும் முடிவடைந்து, கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதி விசாரணை தொடங்கியது.
இந்நிலையில் குறைந்த விலைக்கு கூடுதல் அலைக்கற்றை வழங்கியதில் ரூபாய் 880 கோடி இழப்பு என சிபிஐ புகார் தெரிவித்ததை அடுத்து தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் ஷியாமல் கோஷ் உள்பட பார்தி, ஸ்டெர்லிங், ஹட்டிசன் மேக் ஆகிய நிறுவனங்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்குது.