ஜியா கான் பற்றி கேட்ட பெண் நிருபரைத் தாக்கி, கேமராவை உடைத்த நடிகர் ஆதித்யா
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் குறித்து அவரது காதலர் சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலியிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர் தாக்கப்பட்டார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் தனது காதல் வாழ்க்கை கசந்ததால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதற்காக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜியா கானின் தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொலை
ராபியா தாக்கல் செய்த மனுவில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆதித்யா பஞ்சோலி
ஜியா கான் விவகாரம் குறித்து ஜீ நியூஸின் நிருபர் உனைசா சூரஜின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலியை நேற்று சந்தித்து கேள்வி கேட்டார்.
நிருபர் தாக்குதல்
ஜியா பற்றி கேட்டதும் ஆத்திரம் அடைந்த ஆதித்யா ஜீ நியூஸ் நிருபரை திட்டிவிட்டு அவரது கையை கதவுக்கிடையே வைத்து திறந்து, திறந்து மூடியுள்ளார். இதில் நிருபருக்கு கையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா நிருபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் வைத்திருந்த கேமராவை பறித்து உடைத்துவிட்டார்.
ஏற்கனவே
ஆதித்யா தனது பக்கத்து வீட்டுக்காரரான பார்கவ் பட்டேலை தாக்கியது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.