நடிகை ஜியா கான் மரணம்: நடிகர்கள் ஆதித்யா, சூரஜ் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் மரணம் தொடர்பாக இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர் ஜியா கான். ரங்கீலா படத்தை பார்த்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜியா 2007ம் ஆண்டு ரிலீஸான ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் இந்தி படம் மூலம் நடிகையானார்.
ஏ.ஆர். முருகதாஸின் கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்த ஜியா இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜை காதலித்து வந்தார்.
தற்கொலை
சூரஜுக்கும், ஜியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் ஜியா தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடிதம்
தனது தற்கொலைக்கு காரணம் காதலர் சூரஜ் பஞ்சோலி தான் என்று ஜியா எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டிய சூரஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொலை
ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது தாய் ராபியா கான் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜியாவின் உடலில் அவரை யாரோ கடித்த காயங்கள் இருந்ததை ராபியா வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
சிபிஐ
ராபியாவின் கோரிக்கையை ஏற்று ஜியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோரின் வீடுகளில் புதன்கிழமை சோதனை நடத்தியுள்ளனர்.
ஹீரோ
சூரஜ் பஞ்சோலி ஹீரோ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். சல்மான் கானின் சல்மான் கான் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.