ரூபா பேட்டியளிக்க தடை போடுங்க.. சித்தராமையாவுக்கு, புகழேந்தி கடிதம்!
சசிகலாவை குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறும் ரூபா மீது நடவக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வருக்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூரு : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை குறித்து ரூபா ஊடக விளம்பரம் தேடுகிறார் என்று அதிமுக அம்மா அணியின் புகழேந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி சார்பில் அவருடைய வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் மூலமாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சில முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறியுள்ளார். ரூபாவின் குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டி.ஜி.பி. உள்பட சிறை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
விதிகளை மீறுகிறார்
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும், போலீஸ் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரூபா தாமாகவே ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இது விதிமுறைகளை மீறிய செயலாகும். சிறை முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரூபா வரம்பு மீறுகிறார்
விசாரணை உத்தரவை தொடர்ந்து சிறைத்துறையில் பணியாற்றிய சத்ய நாராயணராவ், ரூபா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது சிறை முறைகேடுகள் பற்றி விசாரிக்கும் விசாரணை குழுவுக்கு நேர்மையான விசாரணையை நடத்த வழிவகுக்கும். பணி இடமாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி. ரூபா தவிர இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.
ஊடகங்களுக்கு பேட்டி
சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டாலும் ரூபா சுதந்திரமாகவும், தொடர்ச்சியாகவும் தமிழ் தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். குறிப்பாக, சிறையில் உள்ள சசிகலாவை குறிவைத்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார். இதன்மூலம் அவர் தனக்குத்தானே ஊடக விளம்பரம் தேடிக்கொள்கிறார்.
கண்டனத்திற்குரியது
சிறை முறைகேடுகள் தொடர்பாக விசாரணை அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதுகுறித்து கருத்துகள் தெரிவிக்கக் கூடாது. ஆனால், அவர் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டியளிக்கிறார். இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல் அவருடைய நடவடிக்கைகள் விசாரணையை பாதிக்கும். ரூபாவின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும்.
ரூபா தலையிடுகிறார்
சசிகலா மற்றும் சிறை அதிகாரிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளுக்கு கசிந்து உள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ள ரூபாவுக்கு சிறை முறைகேடுகள் விசாரணையில் தலையிடுவதற்கு அனுமதி இல்லை.நேர்மையான விசாரணை நடந்தால் மட்டுமே குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைகள் வெளிவரும். அதற்கு தேவையான சூழ்நிலைகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
எனவே, மேற்கொண்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ரூபா பேட்டியளிப்பதற்கு அனுமதிக்க கூடாது. அவருடைய மறைவான ஆசைகளை நிறைவேற்றவிடாமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், தேவைப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.