தினகரன் அணிக்கு இரட்டை இலை கிடையாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
தினகரன் அணிக்கு இரட்டை இலை கிடையாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: தினகரன் அணிக்கு இரட்டை இலை கிடையாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் தனது அணிக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
உத்தரவிட முடியாது
இந்த மனு தொடர்பாக கடந்த வாரம் பதிலளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்தது.
முதல்வர் பதில் மனு
இதைத்தொடர்ந்து குக்கர் சின்னம் கோரிய தினகரன் மனு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது.
வழக்கறிஞர் சோப்ரா
இதுதொடர்பாக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பதில் அளித்த நிலையில் இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சோப்ரா முக்கிய வாதங்களை முன்வைத்து வாதாடினார்.
தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு கட்சிப் பெயர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. டிடிவி தினகரன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் கட்சியின் பெயர் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவசரம் காட்ட வேண்டாம்
மேலும் தமிழகத்தில் தற்போது தேர்தல் ஏதும் இல்லை என்தால் கோர்ட் அவசரம் காட்ட தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. டிடிவி தினகரனின் அத்தனை கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் தினகரன் தரப்பு திக்குமுக்காடியுள்ளது.