அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார்.
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி டெல்லியில் அமித்ஷா முன்பு பாஜகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைந்தபின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து சில அதிருப்தி காரணமாக அதிமுகவில் மேலும் சில அணிகள் பிரியும் என்று கருத்துகள் நிலவின.
இதனால் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் எந்த அணியிலும் செல்லாமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவருக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தது. மேலும் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் இணைவதாக இருந்தது. ஆனால் அமித்ஷாவின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தார். அவருடன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், ராஜராஜன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்.