காவிரி விவகாரம்.. அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு
அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் உள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
தனக்கு எதற்கு பதவி?
மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது தனக்கு எதற்கு பதவி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முடிவு
எம்பிக்கள் தற்கொலை செய்வதால் நாட்டுக்கு என்ன நன்மை என்று கேள்வி எழுப்பிய அவர், ராஜினாமா செய்வது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றார்.
மக்களுக்காக வாழ்ந்தார்
தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் முத்துக்கருப்பண் தெரிவத்ததார். ஜெயலலிதா மக்களுக்காக வாழ்ந்தார் என்றும் அவர் என்ன நோக்கத்திற்காக பதவி கொடுத்தாரோ அதனை நிறைவேற்றுவேன் என்றார்.
முத்துக்கருப்பன் ராஜினாமா
எதிர்க்கட்சிகள் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக எம்பி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.