சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிப்பு... மீண்டும் மீண்டும் அதிமுக எம்.பிக்களைப் புறக்கணிக்கும் மோடி
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம், இதுவரைக்கும் பதில் இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை கூறியுள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரவு பகலாக போராடி வரும் இளைய தலைமுறையினர், முதியவர்கள், குழந்தைகள் என பலரும் வாடி வாசல் திறக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளார். முதல்வருக்கு மட்டுமே பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக எம்.பிக்களும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்கள் சந்திப்பார்களா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு தடைக்கு உச்சநீதிமன்றத்தை மட்டும் தடை கூற முடியாது என்றார். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வரும் நேரடியாக பிரதமரை சந்தித்து பேச உள்ளார். நாங்களும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால் பிரதமரிடம் இருந்து பதில் இல்லை என்றார்.
பிரதமரை அணுகுவதில் தமிழக அரசு தாமதிக்கவில்லை, சட்டத்திருத்தம் கொண்டு வருவது மத்திய அரசின் கடமை என்றும் தம்பித்துரை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அதிமுக எம்.பிக்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் பிரதமரை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் பிரதமர் சந்திக்காமல் புறக்கணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.