தமிழகத்தின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து அவமதிப்பதா? மோடி அலுவலகம் முன் அதிமுக எம்பிக்கள் தர்ணா!!
டெல்லி: தமிழக மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியை கண்டித்து அவரது அலுவலகம் முன்பாக அதிமுக எம்பிக்கள் டெல்லியில் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் திடீரென நிலைப்பாட்டை மாற்றி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
பேரணி
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக எம்பிக்கள் டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.
7 பேருக்கு மட்டும்...
ஆனால் பிரதமர் அலுவலக அதிகாரிகளோ அனைத்து அதிமுக எம்பிக்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். 7 எம்.பிக்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.
போராடியும் அனுமதி இல்லை
இது ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதிக்கும் செயல் என அதிமுக எம்பிக்கள் கொந்தளித்தனர். அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராடியும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.
தர்ணா
இதனால் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கோரி அவரது அலுவலகம் முன்பாக அதிமுக எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.