காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.,க்கள் போராட்டத்தில்
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 9வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவே இறுதித் தீர்ப்பு என்றும் இதனை எதிர்த்து எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகின்றன. இதுதொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியை சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த சட்டசபை சிறப்புக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யவும் தயார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.