காவிரி: 13வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் அதிமுக எம்.பி.,க்கள்
13வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக, ஆந்திர எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்களும் 13வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகின்றன.
இதனையடுத்து இந்த நாடாளுமன்ற கூட்டதொடர் தொடங்கிய நாளில் இருந்தே தமிழக அதிமுக எம்.பி.,க்கள் அவையைப் புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே நின்று 'நீதி வேண்டும்... நீதி வேண்டும்.. காவிரி பிரச்சனையில் நீதி வேண்டும்..' என்கிற கோஷத்தோடு கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் 13வது நாளாக தமிழக அதிமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதே போல, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.,க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.