பெண்ணை அடிமைப்படுத்துவதுதான் குற்றம்.. இது அல்ல.. இன்றும் சாட்டையை சுழற்றிய நீதிபதி சந்திரசூட்
தண்டனை சட்ட பிரிவு 497ஐ நீக்கிய தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் மிக சிறப்பான தீர்ப்பை எழுதி இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: தண்டனை சட்ட பிரிவு 497ஐ நீக்கிய தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் மிக சிறப்பான தீர்ப்பை எழுதி இருக்கிறார். நேற்று ஆதார் வழக்கில் அதிரடியான கருத்துக்களை கூறிய இவர் இன்றும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்தார்.
ஆணும், பெண்ணும் திருமண உறவிற்கு வெளியே பாலியல் உறவு மேற்கொள்வது தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497யை நீக்கி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில், இந்த சமுதாயம் பெண்களுக்கு எதிரான பல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகிறது. பெண் ஒரு சிலை போல எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறது. பெண் ஒன்றும் உங்கள் உடைமைகளை பார்த்துக் கொள்ளும் பொருள் கிடையாது.
பெண் தூய்மையானவள்?
பெண் தூய்மையானவள் என்கிறார்கள். ஆனால் வன்புணர்வு செய்ய கொஞ்சம் கூட அஞ்சுவது இல்லை. கடவுள் என்று சொல்லிவிட்டு பெண்ணை போட்டு அடிக்கிறார்கள். பெண் குழந்தைகளை கருக்கொலை செய்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு உள்ளாகவே பெண்ணிற்கு எதிராக ஆயிரம் கொடுமைகளை செய்கிறார்கள்.
எது பிரச்சனை
இது எல்லாம் உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லையா. இதுதான் குற்றம். பெண்களின் பாலியல் தேர்வு குற்றம் இல்லை. பெண் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும். யார் யாருடன் வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கலாம், என்றுள்ளார்.
ஆதார் வழக்கு
இதேபோல் நேற்றும் ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அதேபோல் ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது என்றும் கூறினார். ஆதார் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஏமாற்று வேலை. ஆதார் தனி மனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆதார் மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது என்று கடுமையாக குற்றச்சாட்டு வைத்தார்.
2022
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வயதின் அடிப்படையில் இவர் விரைவில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். 2022ல் நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார் என்று கூறப்படுகிறது. நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் மும்பையில் பிறந்தவர். இவர் தந்தை ஒய்.வி சந்திரசூட் இந்தியாவில் அதிக நாட்கள் தலைமை நீதிபதியாக இருந்த பெருமைக்கு உரியவர்.