கள்ளக்காதல் குற்றம் கிடையாது.. இந்த சட்டப்பிரிவே தவறானது.. அதிரடி தீர்ப்பின் முழு விபரம்!
சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு 497ஐ நீக்கிய தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு 497ஐ நீக்கி வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
திருமண உறவிற்கு வெளியே ஆணும், பெண்ணும் பாலியல் உறவு மேற்கொள்வது தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
[ குடும்பத்தில் கள்ளத் தொடர்பு இருக்கா.. டைவர்ஸ் கேட்கலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி! ]
இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
எஜமானர் கிடையாது?
அதில், பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது. திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது. அது மக்களின் தனிப்பட்ட உரிமை.
பெண் உரிமை
முதலில் பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது. அவர்கள் நினைப்பதை அவர்கள் செய்யலாம். சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது.
அடிமைத்தனமானது
இந்த சட்டம் அடிமைத்தனமானது. மிகவும் பழமையான சட்டம் ஒன்றை நாம் பின்பற்ற கூடாது. இந்த சட்டம் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக மாறி உள்ளது. ஆண்களை மையப்படுத்திய ஒரு சட்டத்தை வழக்கத்தில் வைத்திருக்க முடியாது.
தவறு
100 வருடத்திற்கும் மேலாக இந்த சட்டம் பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இது மிகவும் பாரபட்சமானது. இதை தவறாக பலர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த சட்டம் இன்னும் நீடிப்பது சரியான ஒரு விஷயமாக இருக்காது என்றுள்ளார்.
எப்போது குற்றம்
தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை. இதில் கொலை, தற்கொலை, கடத்தல், மிரட்டல் ஆகியவை நிகழ்ந்தால் மட்டுமே அது தவறு. பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு.
கள்ளக்காதல் குற்றம்
கள்ளக்காதல் தவறு கிடையாது. இவ்வளவு நாட்கள் பெண்களை உரிமை கொண்டாடும் வழக்கம்தான் குற்றம். திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை. அது அவர்களின் விருப்பம். இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது, என்றுள்ளனர்.