ஹைதராபாத் விவகாரத்தில் நேரு- படேல் மோதல்: அத்வானி மீண்டும் கருத்து
டெல்லி: ஹைதராபாதுக்கு ராணுவத்தை அனுப்பும் விவகாரத்தில் நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கும் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து பத்திரிகையாளரான பல்ராஜ் கிருஷ்ணா என்பவர் எழுதிய இந்தியாவின் பிஸ்மார்க்: சர்தார் வல்லபபாய் படேல் என்ற நூலை மேற்கோள்காட்டி தமது ப்ளாக்கில் அத்வானி எழுதியுள்ளதாவது:
ஜனநாயக அமைப்பு முறையில் போலீஸ் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். ஆனால் நேருவின் சம்மதத்தைப் பெறுவது படேலுக்கு கடும் சவாலாக விளங்கியது.
பாதுகாப்பு குழு தலைவராக நேரு இருந்தார். அந்த குழுவின் ஒரு கூட்டத்தில், கடுமையான கருத்து வேறுபாடு எழுந்து படேல் வெளிநடப்பே செய்துவிட்டார். உள்துறை அமைச்சர் வெளிநடப்பு செய்ததால் அத்துறையின் செயலராக இருந்த வி.பி.மேனனும் வெளிநடப்பு செய்தார்.
படேலின் இந்தச் செயலால் நேரு தமது எதிர்ப்பைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பின்னர் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, பிரதமர் நேரு, சர்தார் படேல், உள்துறைச் செயலர் வி.பி.மேனன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில்தான் ஹைதராபாதுக்கு ராணுவத்தை அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாதுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படேல் வலியுறுத்தியபோது, படேலை மதவாதி என்று நேரு கூறியதாக ஐஏஎஸ் அதிகாரி எம்.கே.கே.நாயர் எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி ப்ளாக்கில் அத்வானி எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் 1948-ல் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போது கர்னலாக இருந்த சாம் மானெக்ஷாவின் பேட்டியை மேற்கோள்காட்டி அத்வானி வழக்கம்போல ஐக்கிய நாடுகள் சபை, ரஷியா, ஆப்பிரிக்கா, கடவுள் போன்றவற்றைப் பற்றி நேரு பேசிக் கொண்டிருந்தார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் படேல்- நேரு மோதலை அத்வானி தமது ப்ளாக்கில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.