நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது ? அத்வானி பதில்
டெல்லி: நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது என்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை யொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது? அப்படிப்பட்ட கேள்விக்கே இப்போது இடம் இல்லை. நம் நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரத்தை நசுக்க முயன்ற போது மக்கள் அதற்கு எதிராக கடுமையாக போராடினர். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அத்வானி மறுத்தார்.
நாட்டின் அவசர நிலை காலத்தை நினைவுகூர்ந்த அத்வானி, நமது அரசாங்கம் இதை முயற்சித்த போதும், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் தேசபக்தியை வளர்க்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். நாட்டில் பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.