என்னோட "சிந்து" இப்ப இங்க இல்லையே..... நான் என்ன செய்வேன்? கலங்கிய அத்வானி
டெல்லி: நான் பிறந்து வளர்ந்த சிந்து மாகாணம் இந்தியாவில் இல்லை என்பது எனக்கு காலம் காலமாக இருக்கும் பெரும் சோகம் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
சுதந்திரமடைவதற்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து சிந்து மாகாணம். தற்போது அது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் பிறந்தார் அத்வானி.
டெல்லி வந்திருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்வானி அப்போது சிந்து மாகாணம் குறித்து பேசினார். அதிலிருந்து சில...
உணர்வு
உங்களில் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கும் என்று தெரியவில்லை. இந்தியா பிரிக்கப்படாதபோது, இந்தியா ஒன்றாக இருந்தபோது, ஆங்கிலேயர ஆட்சியில் இருந்தபோது, அந்த இந்தியாவின் ஒரு பகுதியில்தான் நான் பிறந்தேன்.
பிரிந்து போன சிந்து
இந்தியா சுதந்திரமடைந்தபோது, தனி நாடாக மாறியபோது, பிரிக்கப்பட்டபோது, அந்த சிந்துவும் நம்மை விட்டுப் பிரிந்தது. சிந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தபோது நான் பிறந்தேன். இப்போது அது இந்தியாவில் இல்லை.
சோகம் தரும் உணர்வு
இப்போதும் கூட அந்த உணர்வு எனக்கும், எனது சகாக்களுக்கும் எப்போதும் சோகம் தரும். அந்த உணர்வை விட்டு எங்களால் பிரிய முடியவில்லை. வங்கதேச பிரதமர் இங்கு வந்துள்ளார். அவர் முன்பு எனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன்.
சுதந்திரமாக இருந்தேன்
சிந்துவும், கராச்சியும் இந்தியாவுடன் இருக்காது என்று எங்களுக்குத் தெரிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். சிந்துவில் நான் வளர்ந்தபோது, இளம் பிராயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக செயல்பட்டேன். சுதந்திரமாக இருந்தோம். சிந்து இல்லாமல் இந்தியா முழுமை பெறாது என்பது எனது எண்ணம் என்றார் அத்வானி.