பிரதமர் மோடி சிறந்த நடிகர் என பிரகாஷ் ராஜ் விமர்சனம்... லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு
பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்ததற்காக வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம், என்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருக்கிறார்.
மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பினார். இதுபோல் பிரதமரை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கானது வரும் 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.