அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தேசித்தது. இதுதொடர்பாக தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார்.
அதில் அவர், அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். தமிழக சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவானது அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.