ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரும் விடுதலை... நீதிமன்றம் தீர்ப்பு!
11 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 5 பேரின் தண்டனையை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்,58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தண்டனையை நீதிமன்றம் இன்று வழங்குகிறது.
மற்ற 3 குற்றவாளிகளில் சுனில் ஜோஷி விசாரணையின் போதே படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டங்கே, முன்னாள் ஆர்எஸ்எஸ் ப்ரசரக் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்கரா இரண்டு பேரும் விசாரணையில் இருந்து தப்பி வருகின்றனர்.
என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் இந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் மீதான தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக முஸ்லிம் மக்கள் அதிகம் கூடக்கூடிய அவர்களின் வழிபாட்டு தலத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசீமானந்த் டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி முன்னர் அளித்த வாக்குமூலத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த போட்டிருந்த திட்டத்தை ஒப்புகொண்டார். எனினும் பின்னர் தாம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து பின் வாங்கினார் அசிமானந்த்.
2010ம் ஆண்டு அசீமானந்த் சிபிஐயால் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் 2017ம் ஆண்டு வெளிவந்தார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கு, சம்ஜதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்குகளிலும் 2014ம் ஆண்டு அசீமானந்த் ஜாமின் பெற்றுள்ளார். மெக்கா மசூதி குண்டுடிப்பு சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு விசாரணைக்குழு 26 பேர் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தது. எனினும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையிலேயே குண்டுவெடிப்பில் இந்து அமைப்புகளுக்கு தொடர் இருப்பது கண்டறியப்பட்டு தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா 2010ல் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்தே விசாரணையின் போக்கும் மாறியது.
என்.ஐ.ஏ ஏப்ரல் 2011ல் இந்த வழக்கை கையில் எடுத்தது. 2011 மற்றும் 2013ல் வெடிகுண்டு தொடர்பாக 3 குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்தது. சுமார் 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் 200 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கான தீர்ப்பை அறிவித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.