மும்பையை அதிரவைத்த இடதுசாரி விவசாய சங்க பேரணி அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆதரவு- கிலியில் பாஜக
Recommended Video
மும்பை: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மகாராஷ்டிரா இடதுசாரி விவசாய சங்க பேரணிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இதனால் ஆளும் பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
திரிபுரா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் ஆட்சி வீழ்த்தப்பட்டுவிட்டதாக வலசதுசாரிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில்தான் மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து 10,000 பேருடன் தொடங்கியது இடதுசாரி விவசாய சங்க பேரணி.
அலை அலையாக விவசாயிகள்
நாசிக் முதல் மும்பை வரையிலான இந்த பேரணியில் வழியெங்கும் அலை அலையாக விவசாயிகள் சேர்ந்து கொள்ள மும்பையில் லட்சக்கணக்கானோர் அணி திரண்டுள்ளனர். திசையெங்கும் செங்கொடியுடனும் சிவப்பு தொப்பிகளுடனும் விவசாயிகள் பெருவெள்ளமாக காட்சி தருகின்றனர்.
180 மணிநேர லாங் மார்ச்
சுமார் 180 மணிநேர நெடும் நடைபயணத்தின் பின் இன்று காலை மும்பை ஆசாத் மையத்தை இந்த பேரணி வந்தடைந்தது. விவசாயிகளுக்கு இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் உணவு உபசரித்தனர். தானே மாவட்டத்தில் இருந்து பழங்குடி மக்களும் இடதுசாரி விவசாயிகளுடன் கை கோர்த்தனர்.
அதிர்ந்த பாஜக அரசு
மிகவும் கட்டுக்கோப்பாக பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இந்த பிரம்மாண்ட பேரணியை விவசாயிகள் நடத்தி உள்ளனர். இதனால் வெலவெலத்துப்போன மகாராஷ்டிரா பாஜக அரசு, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிப்போம் என அறிவித்திருக்கிறது.
அனைத்து கட்சிகளும் ஆதரவு
இப்பேரணியை ஆதரித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது மகாராஷ்டிரா விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நாட்டின் விவசாயிகளின் பிரச்சனை என கூறியுள்ளார். சிவசேனாவின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா உத்தவ் தாக்கரே நேற்று இந்த பேரணியை வரவேற்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.