ஆம்பன்: 21 ஆண்டுகளுக்குப் பின்.. சூப்பர் புயலை தில்லாக எதிர்கொள்ள தயாராகும் ஒடிஷா, மே. வங்கம்
புவனேஸ்வர்: 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சூப்பர் புயலை மீண்டும் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள்.
ஒடிஷாவின் வரலாற்றில் மிகவும் கொடூரமான இழப்புகளையும் படிப்பினைகளையும் தந்ததுதான் 1999-ம் ஆண்டைய சூப்பர் புயல். அப்போது புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் இல்லாமல் இருந்தது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு
சூப்பர் புயல் உக்கிரம்
அந்தமான் கடலில் உருவான சூப்பர் புயல் ஒடிஷாவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 260 கி,.மீ வேகத்தில் படுபயங்கரமான புயல் காற்று வீசியது. மொத்தம் 36 மணிநேரம் இதே வேகத்தில் அந்த சூப்பர் புயல் ருத்ரதாண்டவமாடியது. ஒடிஷாவின் பல மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.
50,000 பேர் பலி என அச்சம்
ஒடிஷாவையே நிலைகுலைய செய்த அந்த சூப்பர் புயலுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என அப்போது கூறப்பட்டது. ஒடிஷாவின் ஜகத்சிங்புரில் மட்டுமே அதிகரப்பூர்வமாக 8,119 பேரை அந்த சூப்பர் புயல் காவு கொண்டது.
ஆம்பன் சூப்பர் புயல்
இதற்குப் பின்னர்தான் ஒடிஷாவில் புயல்களை எதிர்கொள்ளும் படிப்பினைகள் விஸ்வரூபம் எடுத்தன. எத்தனை புயல்கள் வந்தாலும் உயிரிழப்புகள் இன்றி அவற்றை கரைசேர்த்து வழிகாட்டி மாநிலமாக திகழ்கிறது ஒடிஷா. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கக் கடலில் ஆம்பன் என்ற பெயரில் புதிய சூப்பர் புயல் உருவெடுத்திருக்கிறது.
மே 20-ல் கரையை கடக்கிறது
வங்க கடலின் வடகிழக்கில் மேற்கு வங்க மாநிலத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஆம்பன் புயல் மே 20-ந் தேதி கரையை கடக்க உள்ளது. இந்த ஆம்பன் புயல் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு மாநில அரசுகளும் முழு வீச்சில் தயாராக உள்ளன.
பிரதமர் மோடி ஆலோசனை
இதனிடையே ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விவரிக்கப்பட்டன.