38 ஆண்டுகள் விமானங்களோடு "வாழ்ந்த" ஷிமோகா ராஜாராம்
பெங்களூர்: இந்திய விமானப்படையில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய ஏர் மார்ஷல் ராஜாராம் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஹொஸநகராவைச் சேர்ந்தவர் ஏர் மார்ஷல் ஹெச்.பி. ராஜாராம். 38 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றிய அவர் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். 1970களில் வாலிபராக இருந்த அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் விமானப்படை பணிக்கு விண்ணப்பித்தனர்.
நேர்முக காணலுக்கு டெல்லிக்கு அழைப்பார்கள், ரயிலில் செல்லலாம் என்று ஆசையுடன் இருந்த ராஜாராம் மற்றும் அவரது நண்பர்களுக்கு மைசூரில் நேர்காணல், உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
இது குறித்து ராஜாராம் கூறுகையில்,
என் தந்தை ஒரு டெய்லர். 7 பேரில் நான் தான் மூத்தவன். 1976ம் ஆண்டு விமானப்படையில் சேர்வதற்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டேன். 1977ம் ஆண்டு விமானப்படையின் நிர்வாக பிரிவில் பணி கிடைத்தது. அதற்கு முன்பு ஒரு ஆண்டு பயிற்சி பெற்றேன். துவக்க காலத்தில் நான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவது மிகவும் கடினம்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டபோது 1989ம் ஆண்டு நான் வவுனியா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றியது சவாலாக இருந்தது. அந்த அனுபவத்தை மறக்க முடியாது என்றார்.
மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர் மரபணுவியல் தொடர்பாக பி.ஹெச்.டி. படிக்கவும் விண்ணப்பிதிருந்தார். ராஜாராம் என்றால் தங்க மனசுக்காரர் என்று சகாக்களிடம் பெயர் எடுத்துள்ளார்.
விசிஷ்ட் சேவா பதக்கம் மற்று அதி விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்ற ராஜாராம் நல்ல பேட்மிண்டன் வீரர் ஆவார். ஓய்வுக்கு பிறகு அவர் பெங்களூரில் செட்டில் ஆகிறார்.