கர்நாடகா: 40 ஆண்டுகளில் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த ஒரே முதல்வர் சித்தராமையா
கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்ற சரித்திரம் படைத்திருக்கிறார் சித்தராமையா.
கர்நாடகாவில் 1972-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸின் தேவராஜ் அர்ஸ் முதல்வரானார். அவர் 1977-ம் ஆண்டு வரை முதல்வராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு தேர்தலில் வென்று தேவராஜ் அர்ஸ் வென்று மீண்டும் முதல்வரானார்.
ஆனால் 2 ஆண்டுகாலம்தான் 2-வது முறையாக முதல்வராக பதவி வகித்தார் தேவராஜ் அர்ஸ். தேவராஜ் அர்ஸுக்குப் பின்னர் சுமார் 40 ஆண்டுகால கர்நாடகா அரசியல் வரலாற்றில் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்த முதல் முதல்வர் என்ற சரித்திரத்தை தற்போது சித்தராமையா உருவாக்கியுள்ளார்.
ராமகிருஷ்ண ஹெக்டே
1980-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் பதவியில் இருந்து பதவி விலக 3 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தார் குண்டுராவ். 1983-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி வென்று ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். கர்நாடகாவில் முதலாவது காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஹெக்டே. ஆனால் 1984-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜனதா கட்சி படுதோல்வியை தழுவியதால் முதல்வர் பதவியை ராஜினிமா செய்தார். 1985-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி மீண்டும் வெல்ல மீண்டும் முதல்வரானார் ஹெக்டே. ஆனாலும் குற்றச்சாட்டுகளில் சிக்கி 1986, 1988 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் பதவியை ராஜினாமா செய்தார் ஹெக்டே. முதல்வராக முழு ஆட்சிக் காலமும் பதவி வகிக்கவில்லை.
எஸ் ஆர் பொம்மை வழக்கு
1988-ம் ஆண்டு ஜனதா தளத்தின் எஸ்.ஆர். பொம்மை முதல்வரானார். பொம்மை அரசானது ஓராண்டுதான் பதவி வகித்தது. பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதாக பொம்மை அரசை ஆளுநர் கலைத்தார். இதை எதிர்த்து பொம்மை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புதான் இன்றும் ஆளுநர்களுக்கு கடிவாளமாக இருந்து வருகிறது.
வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா
1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்றது. 1968-71 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த வீரேந்திர பாட்டீல் முதல்வரானார். ஆனால் அவரது ஆட்சியும் ஓராண்டுதான் நீடித்தது. 1990-ம் ஆண்டு பங்காரப்பாவை முதல்வராக்கினார் காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி. ஆனால் 2 ஆண்டுகள்தான் பங்காரப்பா முதல்வராக இருந்தார். அவரை பதவி விலகச் செய்தது காங்கிரஸ் மேலிடம்.
தேவகவுடா
1992-ம் ஆண்டு வீரப்ப மொய்லி முதல்வரானார். 1994-ம் ஆண்டு வரைதான் மொய்லி முதல்வராக இருந்தார். 1994-ம் ஆண்டு ஜனதா தளம் அதிக இடங்களைக் கைப்பற்ற தேவ கவுடா முதல்வரானார். ஆனால் 1996-ம் ஆண்டு பிரதமரான நிலையில் முதல்வர் பதவியை தேவ கவுடா ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஜே.எச்பட்டேல் 1999-ம் ஆண்டு ஆண்டுவரை முதல்வராக இருந்தார்.
முதல்வராக தரம்சிங்
1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெல்ல எஸ்.எம். கிருஷ்ணா முதல்வரானார். ஆனால் பதவி காலம் முடிவதற்கு 5 மாதங்களுக்கு முன்னரே 2004-ல் தேர்தலை சந்தித்தார். 2004- 2006ஆம் ஆண்டு காலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசில் தரம்சிங் முதல்வராக இருந்தார். 2006-2007 ஆம் ஆண்டு குமாரசாமி முதல்வராக இருந்தார்.
சட்ட விரோத சுரங்க வழக்கு
2007-ம் ஆண்டு குமாரசாமி ராஜினாமா செய்தார். பின்னர் 2008-ம் ஆம் ஆண்டு மே மாதம் வரை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. 2008-ம் ஆண்டு பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கைப்பற்றியது. எதியூரப்பா முதல்வரானார். ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி வழங்கியதில் 2011-ம் ஆண்டு பதவியை எதியூரப்பா ராஜினாமா செய்தார். 2011-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை சதானந்த கவுடா முதல்வராக இருந்தார்.
சரித்திரம் படைத்த சித்தராமையா
2012-2013-ம் ஆண்டு வரை ஜெகதீச் ஷெட்டர் முதல்வர் பதவி வகித்தார். 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று சித்தராமையா முதல்வரானார். தற்போது 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சித்தராமையா.