காவிரி நடுவர் மன்ற கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!
டெல்லி: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான விளக்க மனுவை விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற காவிரி நடுவர் மன்றக் கூட்டம் நிராகரித்தது.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக 1892ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
1924ஆம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டில் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பான பல வழக்குகளின் விசாரணையின் முடிவில் 1990ஆம் ஆண்டு மே மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பு என்ன?
பின்னர் காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், தமிழகத்துக்கு மொத்தம் 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும். இதில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டு ஒதுக்க வேண்டும். அந்த நீர் அளவில் புதுச்சேரிக்கு உரிய 7 டிஎம்சி நீரை தமிழகம் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்டு அரசுகள் முறையீடு
இத் தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் முறையிட்டிருந்தன.
என்.பி.சிங். ராஜினாமா
கடந்த 7 ஆண்டுகளாக அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தன. இந் நிலையில், நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி. சிங், 2012-ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தலைவராக சவுஹான் நியமனம்
அதன் பிறகு நடுவர் மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இதைத் நடுவர் மன்றத் தலைவராக கடந்த மே 13-ந் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ். சவுஹானை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது.
டெல்லியில் கூடியது
இதையடுத்து 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் டெல்லியில் இன்று கூடியுள்ளது.
4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
முன்னதாக காவிரி விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு மாநில அரசுகளுக்கும் நடுவர் மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, டெல்லி ஜன்பத்தில் உள்ள ஜன்பத் பவனின் ஐந்தாவது தள மகாதயி நீர் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்பாய அலுவலகத்தில் காவிரி நடுவர் மன்றம் முன்பு வர உள்ளது.
இதனால் விசாரணைக்கு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படடயில் 4 மாநில அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகம் கோரிக்கை
இன்றைய கூட்டத்தில் 2007ஆம் ஆண்டு தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட்ட மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முந்தைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அதன் மீதான தீர்ப்பு வெளியான பின்னரே, இந்த பிரச்னையில் தாங்கள் விசாரணை நடத்த முடியும் என கூறி தமிழக அரசின் கோரிக்கையை காவிரி நடுவர் மன்றம் நிராகரித்து விட்டது.