அடங்காத பாஜக... காஷ்மீர் 370, சி.ஏ.ஏ வரிசையில் வருகிறதா சர்ச்சைக்குரிய பொதுசிவில் சட்டம்?
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து, குடியுரிமை சட்ட திருத்தம் என மத்திய பாஜக அரசு பற்ற வைத்த நெருப்பு இன்னமும் அடங்கவில்லை.. இப்போது அடுத்ததாக மதங்களின் உரிமைகளைப் பறிக்கும் பொதுசிவில் சட்டத்தை கொண்டுவரப் போகிறதாம் மத்திய பாஜக அரசு.
2014-ல் மத்தியில் பாஜக தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமமைத்த போது தமது இந்துத்துவா கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை அடக்கி வாசித்தே அமல்படுத்த முனைந்தது. ஆனால் 2019 தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜக தமது இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை அதிரடியாக மத்திய அரசு நீக்கியது. அத்துடன் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக்கியது. இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் வரக்கூடாது என்பதற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்தது மத்திய அரசு.
மத்திய அரசின் சிஏஏ
மத்திய அரசின் இந்நடவடிக்கை மிகப் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக பல மாதங்களாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போர்க்களமான டெல்லி
தலைநகர் டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். டெல்லி ஷாகீன் பாக் போர்க்களத்தை கண்டு மத்திய பாஜக அரசு நடுநடுங்கிப் போயுள்ளது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என அடுத்தடுத்து சர்ச்சைகளுக்குத் தாவிக் கொண்டே இருக்கிறது மத்திய பாஜக அரசு.
அடுத்தது பொதுசிவில் சட்டம்
இத்தோடு அடங்கிப் போகாமல் பிரளயத்தை ஏற்படுத்தப் போகிற பொதுசிவில் சட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் போகிறது பாஜக. அதுவும் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் இம்மசோதாவை கொண்டுவரப் போகிறதாம். இதற்காகத்தான் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று கொறடா உத்தரவை பாஜக பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பொதுசிவில் சட்டம் என்பது பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. பொதுசிவில் சட்டம் என்பதே இஸ்லாமியர்களை குறி வைத்து கொண்டுவரப்படுகிற ஒன்றுதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டம்
இது தொடர்பாக பேராசிரியர் அ. மார்க்ஸ் தமது "இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்" என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அதில், எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்? மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு.
பொதுசிவில் சட்டம் சாத்தியம் இல்லை
உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல.
இந்து சாதிகளில் வேறுபாடு
இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு.
ஶ்ரீரங்கம் வடகலை தென்கலை
இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். ஶ்ரீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம், இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை என குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருப்பதாக் சொல்லப்படும் பொதுசிவில் சட்டம் மிகப் பெரும் சர்ச்சையையும் போராட்டங்களையும் எதிர்கொள்ளும் என்பதுதான் யதார்த்தம்.