அவிங்க வேண்டாம், எங்க கிட்ட வாங்களேன்.. கங்குலிக்கு காங். வலைவீச்சு?
கங்குலியை பாஜகவுக்குள் இழுக்க அக்கட்சி தீவிரமாக முயற்சித்தது. நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோர் மூலம் இந்த முயற்சிகள் நடந்தன. மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் கூட கங்குலிக்குக் கூறிப் பார்த்தனர். ஆனால் அதை கங்குலி நிராகரித்து விட்டார். அதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.
இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி, கங்குலியை வளைக்கப் பார்ப்பதாக தெரிகிறது. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டச்சார்யா கங்குலியை திடீரெனப் பார்த்துப் பேசியுள்ளார்.
இன்று காலை இந்த சந்திப்பு கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டில் நடந்தது. இதுகுறித்து பட்டசார்யா கூறுகையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் காரணம் இதில் இல்லை. எந்த முக்கியத்துவமும் இல்லை. ஊகங்களுக்கு அவசியமும் இல்லை.
கங்குலி என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்வார். எந்த முடிவாக இருந்தாலும் அது அவரது முடிவாகவே இருக்கும். நான் எந்தத் திட்டத்தையும் அவரிடம் வைக்கவில்லை. இது ஒரு தனிப்பட்ட சந்தி்ப்பு என்றார் பட்டச்சார்யா.
ஆனால் காங்கிரஸ் கட்சி, கங்குலியை இழுக்க முயல்வதாகவே கூறப்படுகிறது. சச்சினுக்கு ராஜ்யசபா சீட் தந்தது போல, கங்குலிக்கும் ராஜ்யசபா அல்லது லோக்சபா தேர்தலில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.