‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் முடிவடைந்தது. ராகுல் காந்தி அங்கு தேசியக்கொடி ஏற்றிய நிலையில் அவர் நெகிழ்ச்சியாக முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர்: ராகுல் காந்தி 2022 செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கிய நிலையில் 145 நாட்களில் சுமார் 3,500 கிலோமீட்டரை கடந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று முடிவடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தேசியக்கொடி ஏற்றி பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பழம்பெரும் கட்சியாக நீண்ட வரலாற்றை கொண்டது காங்கிரஸ். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி பாஜவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இதனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு அக்னி பரீட்சையாகவே உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
குமரியில் துவங்கிய ஜோடோ யாத்திரை
இதன் ஒருபகுதியாக தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ‛பாரத் ஜோடோ யாத்திரையை' தொடங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி இந்த பாதயாத்திரையை துவக்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக்கொடி வழங்கி பாரத் ஜோடோ யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 150 நாட்கள் சுமார் 5 மாதங்கள் நடைபெற உள்ளது. 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து காஷ்மீர் செல்ல திட்டமிடப்பட்டது.
ஸ்ரீநகரில் முடிந்த யாத்திரை
அதன்படி ராகுல் காந்தியின் இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் வழியாக சுமார் 70க்கும் அதிகமான மாவட்டங்களை கடந்து ஸ்ரீநகரை இன்று சென்றடைந்தது. 145 நாட்களில் சுமார் 3,500 கிலோமீட்டரை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்துள்ளது. இந்த பாதயாத்திரை திட்டமிட்டபடி முடிவுக்கு வந்தது. பாதயாத்திரையின் இறுதி பகுதியான காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல்காந்தி இன்று தேசியக்கொடியை ஏற்றினார்.
நாளை பொதுக்கூட்டம்
நாளை ராகுல் பாதயாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. அங்குள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாரத் ஜோடோ யாத்திரையும் முடிவுக்கு வர உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட 23 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதனால் நாளைய கூட்டம் என்பது இந்திய அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. ஏனென்றால் நாளை ராகுல் காந்தியின் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றால் அது 2024 கூட்டணிக்கு அச்சாரமாக மாறலாம் என்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.
ராகுல் போட்ட ட்விட்
இந்நிலையில் தான் பாரத் ஜோடோ யாத்திரையை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவு ஒன்று செய்துள்ளார். இந்த பதிவில், ‛‛லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும். அன்பு எப்போதும் வெற்றிபெறும். இந்தியாவில் நம்பிக்கையில் புதிய விடியல் ஏற்படும்'' என பெருமையாக கூறியுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கும்போது எத்தனை இடையூறுகள் வந்தாலும் ஸ்ரீநகர் சென்று தேசியக்கொடி ஏற்றப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி
உண்மையில் இந்த பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியினருக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த யாத்திரையில் திமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், சிவசேனா உள்பட பல கட்சி தலைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் நடிகர் நடிகைகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர், சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்பட பல்வேறு துறையை சார்ந்தவர்கள் ராகுல் காந்தியுடன் கைகோர்த்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.